தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Donnerstag, 27. Oktober 2016

கந்த சஷ்டி - சூரசம்ஹாரம்



ஆறுமுகன் சூரனை வதம் செய்ததாக கூறப்படுவது கதிர்காமம்!
போர் வெற்றியை கொண்டாடும் தலம் திருச்செந்தூர் !
முருகப்பெருமான் அசுரர்களான சூர பத்மனை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம்.
படைக்கும் கடவுளான பிரமதேவருக்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.
காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட"மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.
இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபதுமன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வவல்லமைகளைப் பெற எண்ணி  சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான். இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.
சூரபதுமன் பதுமகோமளை என்னும் பெண்ணை மணந்து வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆண்டுவரும் காலத்தில் அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன்,  இரணியன்,  வச்சிரவாகு ஆகிய புதல்வர்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் (3000-மூவாயிரம் பேரும்) பிறந்தனர்.
சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டு இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்து அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான்.
அசுரர்களின் இக் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த  ஆறுமுகனை அவதாரம் செய்தார்.
ஆறுமுகன் அவதாரம்: தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாறும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீனினம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வரும் வேளை அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினன் உலகமுய்ய.
அன்னை சக்திவேல் வழங்கினார்.
தந்தையிடம் இருந்து பாசுபதம் அஸ்திரம் பெற்றார்.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அருகில் இருந்த  பார்வதி தேவி வெட்பம் தாங்காது பாய்ந்து விலகி ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச்சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன. அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் வீரபாகுதேவர் முதலிய இலட்சத்து ஒன்பது வீரர்கள் தோன்றினார்கள். இவர்கள் பின்பு முருகனுக்கு படைவீரர்களாக ஆனார்கள். 
முருகன் அம்மையப்பர் ஆசியுடனும், தன் படைகளோடும், திருச்செந்தூர் வந்து தங்கினார்.
முருகன் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் அமர்ந்து, தேவ குருவான வியாழனிடம், சூரபத்மனின் முழுக் கதையையும் சொல்லுமாறு கேட்கின்றார்.
முருகப் பெருமான் வீரவாகுதேவரை சூரனிடம் சிறை வைத்த தேவர்களை விடுதலை செய்யுமாறு தூதனுப்பினர். முருகன் சிறுபாலகனுக்கு பயந்து தேவர்களை விடுதலை செய்ய   முடியாது என மறுத்தான். முருகன் செந்தூரில் இருந்து சூரபத்மன் முதலான அசுரர்களை அழித்து, தேவர்கள் துன்பம் நீங்கி, உலகம் நலம் பெறுவதற்காக இலங்கையில் உள்ள  வீரமகேந்திரபுரிக்கு படையெடுத்து சென்றார். கந்தன் ஏமகூடத்தில் (கதிர்காமத்தில்) இருந்து சூரனுடன் போர்புரிந்தார்.  
 தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்தார். சூரனின் மகன்அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட 3000 பேரும் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் சென்றான்.
பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியானான்.  சூரனின் தம்பி சிங்கமுகன் போருக்குச் சென்று மடிந்தான்.
தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெருமான் முன் தோன்றி சமாரியாக அம்புக்கணை தொடுத்தான். அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயயாலங்களினால் பலவாறாக தோன்றி போர்செய்தான்.       தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின் ஆணவதிமிரில்போர் செய்யலானான்.  தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய மறுத்து ஆணவத்தால் தொடர்ந்து போர் புரிந்தான். முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், தன் தன்மை மாறாது போர் செய்யலானான். தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான்.  முருகப் பெருமான் இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான். ஆறுநாள் கடுமையான போரால் தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் கடலில் மறைந்திருந்தான். கடைசியாக ஆறாம் நாள் நடுக்கடலில் மாமாரமாய் நின்ற சூரபத்மனை முருகப் பெருமான் எய்திய வேலாயுதமனது இரு கூறாக்கியது. ஆணவம் அழியப்பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து தம்மை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டினான்.


அவன்மேல் இரக்கம் கொண்டு பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.
தன் படையுடன் முருகப்பெருமான் திருச்செந்தூர் வந்தடைந்தார். அங்கு சிவலிங்க மூர்த்தியை வணங்கி பூஜித்தார்.
சூரனை வதம் செய்த இடம் தற்போதைய கதிர்காமம். அதேவேளையில் தன் அவதார நோக்கத்தை முருகப் பெருமான் பூர்த்தி செய்ய, இந்த சம்ஹார வெற்றியை தேவர்கள் அனைவரும் கொண்டாடிய பரம புண்ணியத் தலம் திருச்செந்தூர்.
ஐப்பசியில் தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறையில் பிரதமை தொடக்கம் ஆறு நாட்கள் ஆறுமுகனை வழிபடும் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. தொடக்க நாளில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து சங்கற்பம் செய்வார்கள். ஆறுநாட்களும் கடும் தவமாக முருகனை நினைத்து  உபவாசம் இருந்து வழிபடுவார்கள். ஆலயங்களில் தங்கியிருந்து அன்ன, ஆகாரம் தீர்தத்தை மட்டும் பருகி விரதமிருப்பர். இயலாதவர்கள் 5 நாட்கள் ஒரு வேளை உணவும், 6ம் நாள் உபவாசம் இருந்து வழிபடுவார்கள்.இறுதி நாளில் தர்ப்பை அவிழ்த்து ஆலயத்தில் சமர்ப்பிப்பார்கள். 6ம் நாள் முருகன் ஆலயங்களில் சூரன் போர் நடைபெறும். 7 ம் நாள் பாரணைபூஜை செய்து மகேஷ்வரபூஜை செய்து விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.
ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றன வைகல்
சீரணி முருகவேட்குச் சிறப்போடு பூஜை ஆற்றிப்
பாரணம் விதியிற் செய்தார் பயிற்றும் இவ்விரதம் தன்னால்
தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார்.




Keine Kommentare:

Kommentar veröffentlichen