தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Donnerstag, 15. Dezember 2016

பிள்ளையார் கதை பாடல் 1

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய
பிள்ளையார் கதை    1 -  401

சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தோறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

காப்பு
கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே இக்கதைக்குக் காப்பு. 

திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி
வரும் அரன்றான் ஈன்றருளும் மைந்தா - முருகனுக்கு 
முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை. 

ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் 
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொமுதும்
கொண்டக்கால் வாராது கூற்று. 

சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் தெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே. 

கதை
மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர் 
இந்துதவழ் சோலை இராசமா நகரியில்
அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ் 
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையும்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற 
மதர்விழி பாகனை வழிபடு நாளில்
மற்றவர் புரியும் மாதவங் கண்டு 
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப்  10

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே 
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென
அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில் 
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப
எப்பரிசு ஆயினும் எம்பொருட்டு ஒருசுதன் 
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென 
எமையா ளுடைய உமையாள் மொழிய 
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல் பேதைமை என்று 
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப்  20

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுமை அவளும் மனந்தளர்வு உற்றுப்
பொன்றிடும் மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுதல் அவற்குநீ பிள்ளை யாகச்
சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால் 
மன்றல் செய்து அருள்வோம் வருந்தலை யென்று
விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும் 
பெடை மயிற் சாயற் பெண்மகவு ஆகித்  30

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன் 
சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப்
பாவையுஞ் சிற்றிலும் பந்தொடு கழங்கும் 
யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி
ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும் 
மையார் கருங்குழல் வாணுதல் தன்னை
மானுட மறையோற்கு வதுவை செய்திடக் 
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்புஇறப்பு இல்லாப் பெரியோற்கு அன்றி 
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என 40

மற்றவன் தன்னைஉன் மணமக னாகப் 
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக் 
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து
மருமலி கமல மலர்த்தடத்து அருகில் 
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்
பணியணி பற்பல பாங்கியர் சூழ 
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் புரிதலும்
அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென 
இருவரு மறியா இமையவர் பெருமான்  50

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து 
மானிட யோக மறையவன் ஆகிக் 
குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு 
மடமயில் தவம்புரி வாவிக் கரையில் 
கண்ணுதல் வந்து கருணை காட்டித் 
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி 
மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ 
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும் 
கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும் 
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் 60

மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக் 
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ் 
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப் 
பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை 
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப் 
பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும் 
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச் 
சேடியர் வந்து செழுமலர் குழலியை 
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் 70

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த் 
தந்தைதாய் இருவர் தாளினை வணங்கி 
வாவிக் கரையில் வந்தொரு மறையோன் 
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந் 
தோடு அலர்கமலத் தொடைமறை முனியை 
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன 
மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி 
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என 
மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில் 
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் 80
பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற 
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச் 
சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன் 
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று 
சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி 
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி 
நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லவென் 
பொற்அமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
மானிட வேட மறையவன் தனக்கு 
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப  90

மலையிடை வந்த மாமுனி தன்னை 
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத் 
தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச் 
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி 
ஆயிழை தானும் அவனெதிர் சென்று 
சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி 
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து 
ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும் 
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி  100

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப் 
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப் 

போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய் 
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை 
தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து 
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச் 
சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத் 
தக்கோ லத்தொடு சாதிக் காயும் 
கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு 
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் 110
ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச் 
சிவனெனப் பாவனை செய்து நினைந்து 
தவமறை முனிவனைத் தாளினை வணங்கத் 
தேனமர் குழலி திருமுகம் நோக்கி 
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக் 
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும் 
நெற்றியில் நயனமும் நீல கண்டமும் 
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக் 
கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல் 
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் 120

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப 
மரகத மேனி மலைமகள் தானும் 
விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே 
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர் 
கருடர் கின்னரர் காய வாசியர் 
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர் 
பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை 
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க் 
கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும் 
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின்  130

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத் 
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப் 
பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி 
மாணிக் கத்தால் வளைபல பரப்பி 
ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து 
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப் 
பக்திகள் தோறும் பலமணி பதித்துத் 
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப் 
பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத் 
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப்  140

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக் 
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்
பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து 
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக் 

குலவிய திருமணக் கோலம் புனைந்தார் 
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத் 
திருமணக் கோலஞ் செய்தன ஆங்கே 
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும் 
உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக் 
கடலென விளங்கும் காவணந் தன்னில்  150

சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும்

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல் 
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப் 
பறையொலி யோடு பனிவளை ஆர்ப்ப 
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே 
சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத் 
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச் 
சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின் 
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து 
பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப் 
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே  160

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக 
ஏரார் வழியில் எண்திசை தன்னைப் 
பாரா தேவா பனிமொழி நீயென 
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத் 
திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக் 
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு 
ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே 
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென 
அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு 
மதகரி யுரித்தோன் மதகரி யாக  170

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக் 
கூடிய கலவியில் குவலயம் விளங்க 
நீடிய வானோர் நெறியுடன் வாழ 
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச் 
செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க 
அறம்பல பெருக மறம்பல சுருங்கத் 
திறம்பல அரசர் செகதலம் விளங்க 
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு 
ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும் 
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந்  180

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும் 
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும் 
பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும் 
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங் 
கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந் 
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய் 
ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும் 
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும் 
மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி 
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் 190

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க 
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித் 
தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப் 
பாரண மாகப் பலகனி யருந்தி 
ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று 
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக் 
காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும் 
மைவளர் சோலை மாநகர் புகுந்து 
தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின் 
வான வராலும் மானு டராலும்  200


 ஆவணி விநாயகர் சதுர்த்தி விரதமுறை

கானமர் கொடிய கடுவி லங்காலுங் 
கருவி களாலுங் கால னாலும் 
ஒருவகை யாலும் உயிர ழியாமல் 
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில் 
வரம் பெறுகின்ற வலிமை யினாலே 
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக் 
கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன் 
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி 
இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக் 
கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி  210

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங் 
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி 
முறையிடக் கேட்டு முப்புரம் எரித்தோன் 
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே 
அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி 
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன் 
சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது 
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி 
வென்றுவா வென்று விடைகொ டுத்தருள 
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப்  220

பாங்குறும் அவன்படை பற்று அறக் கொன்றபின் 
தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற் 
கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல் 
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்

குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே 
சோர்ந்து அவன்வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி 
எந்தை விநாயகன் ஏறினன் இப்பால் 
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில்  230

செறிந்தது மற்றவன் திருக்கரத் தினிலே 
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும் 
வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே 
ஒகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ 
வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற் 
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும் 
திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக் 
கணபதீச் சரம் எனுங் காரண நாமம் 
கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச் 
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ 240

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க் 
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி 

இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே 
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர் 
யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள் 
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின் 
மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில் 
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
மனாதிகள் களித்து மரபொடு நோற்றார் 
இப்படி நோற்றிட்டு எண்ணிய பெருநாள்  250

ஒப்பரும் விரதத்து உறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப் 
போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை 
மருமலர் தூவும் வானவர் முன்னே 
நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற 
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமும்
தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் 260

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி 
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும் 

அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான் 
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக் 
கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற் 
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
மார்கழித் திங்கள் மதிவளர் பக்கஞ் 
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்று 270

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம் 
வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம் 
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த 
தருமனும் இளைய தம்பியர் நால்வரும்
தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி 
எண்ணிய விரதம் இடையூறு இன்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாகவுஞ் 
செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று 
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் 280

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை 
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப் 
பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துதல் உற்றான்
அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன் 
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி 
ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன் 
கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன் 
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன்  290

சர்வ ஆபரணமுந் தரிக்கப் பெற்றவன் 
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன் 
ஒருகையில் தந்தமும் ஒருகையிற் பாசமும்
ஒருகையில் மோதகம் ஒருகையிற் செபஞ்செய் 
உத்தம மாலையோன் உறுநினை வின்படி 
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன் 
என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்
புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ் 
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் 300

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தால் 
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண்டாகும்

கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய 
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச் 
சந்ததி தழைத்திடுஞ் சம்பது உண்டாம் 
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும் 
மேலவர் தமையும் வென்றிட லாமெனத் 
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு  310

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும் 
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும் 
விரித்து எமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப 
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான் 
தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர் 
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின் 
முந்தும் புலரியின் முறைநீர் படிந்து 
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப் 
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் 320

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன் 
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர் 
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
பூசைசெய் திடும்இடம் புனிதமது ஆக்கி 
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து 
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயகன் உருவைச் 
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி  330

ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம் 
வாகார் ஆச மனம்வரை கொடுத்து 
ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக் 
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால் 
ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால் 
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப் 
பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால் 
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப் 
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே  340

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன் 
குமார குரவன் பாசாங் குசகரன் 
ஏக தந்தன் ஈசுரன் புத்திரன் 
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன் 

சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன் 
ஏரம்ப மூர்த்தி என்னும் நாமங்களால் 
ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி 
மோதகம் அப்பம் முதற்பணி காரந் 
தீதகல் மாங்கனி தீங்கத லிப்பழம் 
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு   350

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய் 
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து 
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால் 
நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து 
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும் 
மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து 
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு 
உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச் 
சந்தன முத்துத் தானந் தக்கிணை  360

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத் 
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத் 
தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து 
நைமித் திகம் என நவில்தரு மரபால் 
இம்முறை பூசனை யாவர் செய்தாலும் 
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர் 
திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான் 
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி   370

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான் 
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி 
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி 
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான் 
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை  380

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து 
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார் 
உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான் 
கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டுபாண் மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு 
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் 390

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார் 
இப்புவி தன்னில் எண்ணுதற்கு அரிதால் 
அப்படி நீவிரும் அவனை அர்ச்சித்தால் 
எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர் 
என்றுகன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப 
அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு  400
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார்          401

Keine Kommentare:

Kommentar veröffentlichen