தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Montag, 14. November 2016

ஆலய வழிபாடு


சைவர்கள் வழிபடும் சைவநீதியுள்ள இந்து ஆலயம்
1.    நிர்வாகம்:- ஆலய பரிபாலன சபை அல்லது தர்மகர்த்தா சபை ஆனது அறநெறி சார்ந்தவர்களாக, தர்மநெறி சார்ந்தவர்களாக, கல்வியாளர்களாக, ஆன்மிகப் பண்புள்ளவர்களாக, பொதுவுடமைக் கொள்கையுடைய ஆளுமைதிறன் கொண்ட அங்கத்தினரை கொண்ட இறைபக்தி சபையால் பரிபாலனம் செய்யப்படவேண்டும். ஆலய கடமைகளை அனைத்து அங்கத்தினரும் இணைந்து ஆலோசித்து ஆற்றும் பணி ஆக்கபூர்வமானதாக இருக்கும். தன்னிச்சையான செயல்பாடுகளை தவிர்த்து சபையின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற முயலவேண்டும். ஆலயத்துக்கு தேவையான ஆலோசனைகளை உண்மை பேசும் நற்பண்புகள் கொண்ட ஒழுக்கமானவர்களிடம் இருந்து பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

   சுழற்சி முறையில் சமஷ்டி அரசைப்போல் இரு மாதங்களுக்கு ஒருவர் ஆலயத்தின் தலைவர் என்றவகையில் அறுவரைக் கொண்ட நிர்வாக சபையை உருவாக்கவேண்டும். இதன் மூலம் தலைமைதேர்வு அரசியல் கலாச்சாரத்தை முற்றாக ஆலயங்களில் இல்லாது நீக்கமுடியும். அத்தோடு ஆலயத்தில் தொண்டாற்றுவோர் நிர்வாகத்தில் பங்கேற்க முடியும். ஒன்றாக நின்று இறைவனுக்கு உழவாரத்தொண்டு செய்யவேண்டிய இடத்தில் ஆளும், எதிர் கட்சி கேவலங்கள் நீக்கப்பட வேண்டும். ஒருமித்த மனதோடு உறுப்பினர் தெரிவுகள் சாலச்சிறந்தது. தாமே பிரதிநிதி என்ற மக்கள் அதிகம் நிறைந்த சபையில் வேடம் போடும் வேடதாரிகளை இனம்கண்டு ஆலயத்தை விட்டு அகற்றுதல் பொருத்தம்.

2.    ஆலயம் அமைத்தல்:- வேதமும், ஆகமமும் சிவபெருமானால் அருளிச்செய்ப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. சைவ மக்கள் பிறவித்துன்பம் நீங்கி பிறவாமை ஆகிய பேரின்பமாகிய இறைவனின் பாதங்களைஅடையும் வழிமுறையான சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு முறைகளால் இறைவனை வழிபடலாம் என்கிறது சைவ சமயம். சரியை – ஆலயம் அமைத்தல்,தொண்டு; கிரியை – இறைவடிவங்களை வழிபடுதல்; யோகம் – அகத்தால் தியானித்தல் ; ஞானம் – அனுபவ அறிவால் பக்குவம் பெறல்.  

3.    சைவ ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு ஆலயம் அமைத்து தெய்வப்பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், செய்து  நித்திய நைமித்திய  பூஜைகளை சிவாச்சாரியார்களைக் கொண்டு செய்து இறைவனை வழிபாடு செய்யலாம்.  நித்திய பூஜையில் ஏற்படும் குறைகளை நிவர்த்திசெய்வதற்காக நிகழ்த்தப்படும் பூஜையே நைமித்திய  பூஜையாகும். இதுவே வருடம் ஒருமுறை செய்யும் மகோற்ஷவம் ஆகும். சைவ ஆகம விதிகளுக்கு அமைய மகோற்ஷவம் போன்ற கொடியேற்றத்துடன் இணைந்த திருவிழா முறைமை காலம் காலமாக ஆன்றோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
கோவில் திருப்பணி வேலைகளை உரிய நேரத்தில் செய்து அதற்குரிய சடங்குகளை நிறைவேற்றுதல் ஆலய நிர்வாகத்தின் கடமை.
உடலே கோயில்.
ஞானம் முதிரப் பெற்றவர்க்கு இருதயமே இறைவனின் கரு வறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறையை சூழ்ந்துள்ள சுற்றுபிரவாரமாயும், வாயே ஆலயத்தின் வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க ஆலய தீபங்களாயும் அமையும்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே!



4.   ஆலயபூசகர்:- ஆலய குருமார்களிலேயே ஆலயத்தின் அருள்நிலை தங்கியுள்ளது. தகைமைகள் பூரணத்துவம் கொண்ட தகுதியுள்ள பூசகரால், சிவாச்சாரியார்களால் இறைவனுக்கு நித்தியபூஜைகள், திருவிழாக்கள் நடத்தப்படவேண்டும். பூஜைகள் இறைவனுக்கு செய்யவேண்டும். இறைவனுக்கு செய்யும் பூஜைகளை பக்தர்களுக்கு சமர்பிக்கவேண்டும். இறை தரிசனத்துக்காக பத்தர்கள் காத்திருப்பார்கள். அவர்கள் வரும்வரையில் காத்திருந்து பூஜைகள் செய்யவேண்டும். ஆறுதலாக ஆன்மீக பக்தியோடு பூசகர்கள் செய்யும்  அர்சனைகளை உள்வாங்கி  பூஜிக்க வேண்டும். பூசகர்கள் பூஜைகளை செய்யும்போது, வழிபாடுகள் செய்யும் பக்தருக்கு மறைக்காது பூஜைகள் தெரியும்வண்ணம் நின்று பூஜைகளை செய்வது சிறப்பு.
பக்திநிலைக்குரிய கிரியைகளையும், அறிவுநிலைக்குரிய ஞானத்தையும் இறை வழிபாட்டுத் தலங்கள் குருக்கள்மார்கள் ஊடாக மக்களுக்கு தரவேண்டும்.
கருவறையினுள் ஆச்சாரம் மிக்க ஆச்சாரியர்கள் தவிர்ந்த ஏனையோர் உள்ளே பிரவேசிக்க கூடாது.
பூஜைகளின் இறை பிரசாதங்களை உரியமுறையில் கொடுத்தல் வேண்டும். வீபூதியை பெருவிரலால் பூசகர்கள் நெற்றியில் இடல் ஆகாது. வீபூதியை இரு கைகள் நீட்டி வாங்கி முகத்தை திருப்பி நின்று சிவசிவ உச்சரிப்புடன் நெற்றியில் உத்தூளனமாக அல்லது திரிபுண்டரமாக இடுவதே சைவ மரபாகும். அதேபோல் மோதிரவிரால் சந்தனம், குங்குமம் இடுதல் வழமையான நடைமுறை.
5.    இறைவன் புகழை பாடுதலன்றி வீண் வார்த்தைகள் பேசாமல் இருக்க கூட்டுப்பிராத்தனை பஜனை போன்றவற்றை உரிய காலத்தில் நடத்தலாம்.
6.    தமிழ் வேதமாகிய பஞ்ச புராணத்தை ஓதும்போது அடக்க ஒடுக்கமாக நின்று முதலில் திருச்சிற்றம்பலம் என கூறியபின் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், வாழ்த்து ஆகிய அருட்பாக்களை மனம் கசிந்துருகி பண்ணிசையோடு ஓதுதல் வேண்டும். பஞ்ச புராணத்தை ஓதும்போது அனைவரும் அருட்பாக்களை கவனித்து தியானத்தில் அல்லது அமைதியாக இருக்கவேண்டும். அமைதியின்மை  அருட்பாக்கள் ஓதுவோர்க்கு இடையூறாக இருக்கும்.
7.    சகல பக்தர்களும் சுவாமி தரிசனம் பெறும் பொருட்டு ஆண் பெண் இருபாலரும் இரு பக்கங்களிலும் நின்று  தரிசனம் செய்தல் வேண்டும். நடுவில் இடை வெளி விட்டு நின்று வழிபாடு செய்தால் அனைத்து அடியார்களும் வழிபாடு செய்ய ஏதுவாகவிருக்கும்.
8.    திருகோவிலை புனிதமாக வைத்திருக்க வேண்டும். இது அடியார்களின் பக்தி கடமையாகும்.
9.       சகல இந்துக்களின் பராம்பரிய விழாக்களான தைபொங்கல்விழா, கலைவாணிவிழா போன்ற விழாக்களை ஆலயமே நடத்தவேண்டும். புலம்பெயர் நாடுகளில் ஆன்மீக சம்பந்தம் இல்லாதவர்கள் நடத்துவதால் திசை மாறிய நோக்கில் நிகழ்வுகள் நடைபெறுவதுடன் இந்துக்களின் கலை கலாச்சாரம் வியாபார கலாச்சாரமாகவும், தம்மை தாமே பிரதிநிதிநிதித்துவப்படுத்தும் குழு கலாச்சாரமாகவும் மாறிவருகின்றன. பகுத்து அறியும் திறன் அற்ற பெற்றோர்களின் தூரநோக்கு அற்ற தன்மையினாலேயே இவ்வாறான நிகழ்வுகள் புதிது புதிதாக தோற்றம் பெறுகின்றன. பல தமிழர் பாடசாலைகளில் கலைவாணிவிழா கூட பாடசாலைகளில் கொண்டாடப்படுவதில்லை என்பது வேதனையான விடயம்தான்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம். தெளிவுரை:- சாலமன் பாப்பையா

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. தெளிவுரை:- கலைஞர்

Keine Kommentare:

Kommentar veröffentlichen