தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 13. Dezember 2016

பிள்ளையார் பெருங்கதை



பிள்ளையார் பெருங்கதை விரதம் (விநாயக சஷ்டி விரதம்)
விநாயகர் சஷ்டி விரதம் சைவமக்கள் அனுஷ்டிக்கும் விநாயகர் விரதங்களில் ஒன்று.
ஒருமுறை சிவனும், பார்வதியும் சொக்கட்டான்(தாயம்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த மகா விஷ்ணு, சிவபெருமானுக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்லும்நிலை ஏற்ப்பட்டது. இதனால் பார்வதி தேவி கடும் கோபம் கொண்டாள். மகா விஷ்ணுவை குருட்டு மலைப்பாம்பாக போகும்படி சாபம் இட்டார்.
விஷ்ணுவுக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான், சுயமுகாசுரனின் வதம் நடைபெறும் வரை பொறுமையாக காத்து இருக்கும்படி கூறினார். அதன்படி விஷ்ணுவும் மலைப்பாம்பாக மாறி ஆலமர பொந்தினுள் இருந்து விநாயகரை வேண்டி தவம் இருந்தார்.
 சில நாட்களில் சுயமுகாகரனை வதம் செய்து விநாயகர், அவனுக்கு முக்தி அளித்தார். பிறகு அவர் தன் இருப்பிடத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, ஆலங்காட்டில் மலைப்பாம்பாக இருந்த மகாவிஷ்ணுவை கண்டார்.
விநாயகரின் பார்வை பட்டதுமே விஷ்ணு தன் சுய உருவைப் பெற்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விஷ்ணு, ‘விநாயகரே எனக்கு காட்சி அளித்து மகிழ்ச்சி கொடுத்த மார்கழி சஷ்டி தினத்தன்று, உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் துன்பம், துயரங்களில் இருந்து விடுதலை பெற்று நினைத்ததை பெற அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கார்த்திகை மாதத் தேய்பிறைப் பிரதமை தொடக்கம் மார்கழி மாத வளர்பிறைச் சஷ்டி வரையுள்ள இருபத்தொரு தினங்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படும். இவ் விரதம் பெருங்கதை விரதம் ,பிள்ளையார் கதை விரதம் , பிள்ளையார் நோன்பு எனப் பல பெயர்களால் வழங்கப்படும்.
 இவ் விரதம் அனுஷ்டிப்பவர்கள் விரத ஆரம்ப நாளில் இருபத்தொரு இழைகள் கொண்ட காப்பை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்வார்கள். முதலிருபது தினங்களும் ஒரு பொழுது நண்பகல் உணவு உண்பார்கள். இரவில் பால், பழங்கள் உண்பார்கள். இறுதித் தினத்தில் உபவாசம் இருப்பார்கள். நாள் தோறும் பூசையில் இளநீர், கரும்பு, மோதகம், அவல், எள்ளுருண்டை முதலனவற்றை நிவேதனம் செய்வார்கள். பாரணை தினத்தில் பவித்திரமாகக் காப்பை அவிழ்ப்பார்கள்.
இவ் விரத நாட்களில்  விநாயகர் ஆலயங்களிலும் சைவ ஆலயங்களிலும் யாழ்ப்பாணம் சுன்னாகம் அ.வரதபண்டிதர் இயற்றிய பிள்ளையார் கதை, விநாயக புராணம், விநாயக கவசம் என்பவற்றைப் பாராயணம் செய்யும் வழக்கம் நெடுங்காலமாக பேணப்பட்டு வருகின்றது.
விநாயகர் சஷ்டி விரதம் இருப்பவர்கள் சாபம், தோஷங்கள் நீங்கப்பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. முழுவிரதம் இருந்து விநாயகர் சஷ்டியை கடைபிடிப்பவர்களுக்கு வாழ்வில் என்றும் குன்றாத செல்வம் சேரும் என்பதும் சைவர்களின் நம்பிக்கை.


Keine Kommentare:

Kommentar veröffentlichen