தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 20. Dezember 2016

பிள்ளையார் கதை பாடல் 3

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ.வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய
பிள்ளையார் கதை 3     610 - 745

பவுரிகொள் கூத்துடைப் பரமனும் நோற்றுக்     610
கவுரிஅன்று அடைத்த கபாடந் திறந்ததும்
வாசமென் குழலுடை மாதுமை நோற்பத் 
தேசம் போகிய செவ்வேள் வந்ததும்
வானவர் நோற்று வரங்கள் பெற்றதும் 
நாரத முனிவன் நவின்றிடக் கேட்டே 
இந்நிலந் தன்னில் இவ்விர தத்தை 
மன்னவன் வச்சிர மாலிமுன் நோற்றுக் 
காயத் தெழுந்த கடும்பிணி தீர்த்து 
மாயிரும் புவியின் மன்னனாய் வாழ்ந்து 620 

தடமுலைத் திலோத்தமை தனைமணம் புரிந்து 
மழவிடை போற்பல மைந்தரைப் பெற்றுக்
கடைமுறை வெள்ளியங் கயிலையில் உற்றான் 
பரிவொடு இவ்விரதம் பாரகந் தன்னில் 
விரைகமழ் நறுந்தார் விக்ர மாதித்தன் 
மறிகடற் புவிபெற வருந்தி நோற்றிடுநாள் 
மற்றவன் காதல் மடவரல் ஒருத்தி 
இற்றிடும் இடையாள் இலக்கண சுந்தரி 
மெத்த அன்புடன் இவ் விரதம் நோற்பேனென 
அத்தந் தன்னில் அணியிழை செறித்துச்  630
சித்தம் மகிழ்ந்து சிலநாள் நோற்றபின் 
உற்ற நோன்பின் உறுதி மறந்து 
கட்டிய இழையைக் காரிகை அவிழ்த்து 
வற்றிய கொவ்வையின் மாடே போட  
ஆங்குஅது தழைத்தே அலருந் தளிருமாய்ப் 
பாங்குற ஓங்கிப் படர்வது கண்டு 
வேப்பஞ் சேரியிற் போய்ச் சிறையிருந்த 
பூப்பயில் குழல்சேர் பொற்றொடி யொருத்தி 
அவ்வியம் இல்லாள் அவ்விடந் தன்னிற் 
கொவ்வை அடகு கொய்வாள் குறுகி 640

இழையது கிடப்பக் கண்டுஅவள் எடுத்துக் 
குழைதவிழ் வரிவிழிக் கோதை கைக்கட்டி 
அப்பமோடு அடைக்காய் அவைபல வைத்துச் 
செப்ப முடனே திருந்திழை நோற்றிடக் 
கரிமுகத்து அண்ணல் கருணை கூர்ந்து 
பண்டையில் இரட்டி பதம் அவட்கு அருள 
கொண்டுபோய் அரசனுங் கோயிலுள் வைத்தான் 
விக்கிர மாதித்தன் விழிதுயில் கொள்ள 
உக்கிர மான உடைமணி கட்டித் 

தண்டையுஞ் சிலம்புத் தாளினின்று ஒலிப்பக்  650
கொண்டல் போல்வருங் குஞ்சர முகத்தோன் 
மனமிகக் கலங்கு மன்னவன் தன்னிடங் 
கனவினில் வந்து காரண மாக 
இலக்கண சுந்தரி இம்மனை யிருக்கிற் 
கலக்கம் வந்திடுங் கழித்திடு புறத்தெனத் 
துண்ணென வெழுந்து துணைவியை நோக்கிக் 
கண்ணுறக் கண்ட கனவின் காரணம் 
அண்ணல் உரைத்திடும் அவ்வழி தன்னில் 
ஆனை குதிரை அவைபல மடிவுற 
மாநகர் கேடுறும் வகையது கண்டு  660

இமைப் பொழுதுஇவள் இங்கு இருக்க லாகாதுஎன 
அயற் கடைஅவனும் அகற்றிய பின்னர் 
வணிகன் தனது மனைபுகுந்து இருப்ப 
மணியும் முத்தும் வலிய கல்லாய்விட 
அணியிழை தன்னை அவனும் அகற்ற 
உழவர் தம்மனையில் உற்றுஅவள் இருப்ப 
வளர்பயிர் அழிந்து வளம்பல குன்ற 
அயன்மனை அவரும் அகற்றிய பின்னர்க் 
குயவன் மனையிற் கோற்றொடி செல்லக் 
குயக்கலம் உடைந்து கொள்ளை போக  670

அயற்கடை அவனும் அகற்றிய பின்னர்த்
தூசுதூய்து ஆக்குந் தொழிலோர் மனைபுகத் 
தூசுக ளெல்லாந் துணிந்து வேறாகத் 
தூசரும் அவளைத் தூரஞ் செய்ய 
மாலைக் காரன் வளமனை புகலும் 
மாலை பாம்பாம் வகையது கண்டு 
ஞாலம் எல்லாம் நடுங்கவந்துஉதித்தாய் 
சாலவும் பாவிநீ தான்யார் என்ன
வெம்மனம் மிகவும் மேவி முனிவுறா 
அம்மனை அவனும் அகற்றிய பின்னர்  680

அவ்வை தன்மனை அவள்புகுந் திருப்ப 
அவ்வை செல்லும் அகங்கள் தோறும்
வைதனர் எறிந்தனர் மறியத் தள்ளினர் 
கைகொடு குத்தினர் கண்டோர் பழித்தனர்
அவ்வை மீண்டுதன் அகம் அதிற் சென்று 
இவ்வகைக் கன்னிநீ யாரென வினாவக் 
காத்தாண்டு உலகு கருணையோடு ஆண்ட 
மார்த்தாண்ட ராசன் மாமகள் ஒருத்தி
எல்லார்க்கும் மூத்தாள் இலக்கண சுந்தரி 
சொல்லு விக்கிரம சூரியன் மனையெனச்   690

சீர்கெட இருந்த தெரிவையை நோக்கி 
நீரது கொண்டு நிலம்மெழு கிடுகெனச்
சாணி யெடுக்கத் தையலுஞ் சென்றாள் 
சாணியும் உழுத்துத் தண்ணீர் வற்றிப் 
பேணிய புழுவாய்ப் பெரிது தோன்ற 
மான்நேர் விழியாள் வருந்துதல் கண்டு 
தானே சென்று சாணி யெடுத்துத் 
தண்ணீர் கொணர்ந்து தரை மெழுக்கிட்டு 
மண்ணிய வீட்டில் மணிவிளக்கு ஏற்றிப் 
புத்தகம் எடுத்து வாவெனப் புகலப்  700 

புத்தகம் பாம்பாய்ப் பொருந்தி நின்றாட 
மெத்தஉள் நடுங்கி வீழ்ந்தவள் கிடப்பக் 
கொவ்வையங் கனிவாய்க் கோதையை விலக்கி 
அவ்வை தானே அகமதிற் சென்று 
புத்தக மெடுத்துப் பொருந்தப் பார்த்து 
வித்தக நம்பி விநாயக மூர்த்தி 
கற்பகப் பிள்ளைசெய் காரியம் இதுவென 
உத்தமி அவ்வை உணர்ந்து முன்அறிந்து 
தவநெறி பிழைத்த தையலை நோக்கி 
துவலரும் விநாயக நோன்பு நோற்றிடுகஎனக்  710

கரத்து மூஏழுஇழைக் காப்புக் கட்டி 
அப்பமும் அவலும் மாம் பல பண்டமுஞ்
செப்ப மதாகத் திருமுன் வைத்தே 
அவ்வை கதைசொல ஆயிழை கேட்டு 
மத்தகக் களிற்றின் மகா விரதத்தை 
வித்தக மாக வியங்குஇழை நோற்றுக் 
கற்பக நம்பி கருணை பெற்றதன்பின்
சக்கர வாள சைனி யத்தோடு 
விக்ர மாதித்தன் வேட்டையிற் சென்று 
தானுஞ் சேனையுந் தண்ணீர் விரும்பி  720

எவ்வகை செய்வோம் எனஉளம் மெலிந்தே 
அவ்வை தன்மனை அங்குஅவர் அணுக 
எய்துந் தாகமும் இளைப்புங் கண்டு 
செவ்வே அவற்றைத் தீர்க்க வெண்ணி 
இலக்கண சுந்தரி என்பவள் தன்னை 
அப்பமும் நீரும் அரசற்கு அருள்எனச் 
செப்பிய அன்னை திருமொழிப் படியே 
உண்நீர்க் கரகமும் ஒரு பணிகாரமும் 
பண்நேர் மொழியாள் பார்த்திபற்கு உதவ 
ஒப்பறு படையும் உயர்படை வேந்தனும்  730 

அப்பசி தீர அருந்திய பின்னர் 
ஆனை குதிரை அவைகளும் உண்டுந் 

தான்அது தொலையாத் தன்மையைக் கண்டே 
இவ்வகை சமைத்தநீ யாரென வினவ 
மவ்வல்அம் குழலாள் மௌனமாய் நிற்ப 
அவ்வை தான்சென்று அரசற்கு உரைப்பாள்
கணபதி நோன்பின் காரணங் காண்இது 
குணமுடை இவள்உன் குலமனை யாட்டி 
இலக்கண சுந்தரி என்றுஅவ்வை கூற 
மங்கையை நோக்கி மனம்மிக மகிழ்ந்து  740

திங்கள்நேர் வெள்ளிச் சிவிகையில் ஏற்றிக் 
கொண்டுஊர் புகுந்தான் கொற்ற வேந்தனும்
ஒண்தொடி யாரில் உயர்பதம் உதவினன் 
சிந்துர நுதலார் சென்றுஅடி பணியச் 
சுந்தரி இருந்தாள் சுகத்துடன் மகிழ்ந்தே! 745 
நூற்பயன்
பொன்னுமிகும் கல்விமிகும் புத்திரரோடு எப்பொருளும்
மன்னும் நவமணியும் வந்துஅணுகும் - உன்னி
ஒருக்கொம்பின் யானைமுக உத்தமனார் நோன்பின்
திருக்கதையைக் கேட்கச் சிறந்து.

பொற்பனைக்கை முக்கண் புகர்முகத்துப் பொன்மவுலிக்
கற்பகத்தின் நோன்பின் கதைதன்னைச் - சொற்பெருகக்
கற்றவரும் நோற்றவருங் காதலித்துக் கேட்டவரும்
பெற்றிடுவர் கற்பகத்தின் பேறு.

வெள்ளை எருதுஏறும் விரிசடையோன் பெற்றுஎடுத்த
பிள்ளையார் நோன்பின் பெருங்கதையை - உள்ளபடி
நோற்றார் மிகவாழ்வார் நோலாது அருகுஇருந்து
கேட்டோர்க்கும் வாராது கேடு.

சூலிலார் நோற்கிற் சுதரை மிகப்பெறுவார்
காலமிகும் வெங்கலியார் தாம்நோற்கில் - மேலைப்
பிறப்புஎல்லாம் நல்ல பெருஞ்செல்வம் எய்திச்
சிறப்பிலே வாழ்வார் சிறந்து.

பிள்ளையார் கதை முற்றுப்பெற்றது.
திருச்சிற்றம்பலம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen