தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Freitag, 16. September 2016

புரட்டாதிச் சனி







சைவசமயத்தில் பிறந்த அனைவருக்கும் சோதிடம் எனும் கலை இன்றியமையாத நம்பிக்கை வழிகாட்டியாக கணிக்கப்படுகிறது. அதில் நவக்கிரகங்களின் பலனை வைத்தே கணிப்பீடு செய்கிறார்கள். ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு,கேது,சனி ஆகும். இவைகளில் சனி என்ற சனீஸ்வர பகவான்தான் முதன்மையானது. சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர்.  அதிலும் சனீஸ்வரன் மீதே அதிக வழிபாடு உண்டு. ஏழரைச்சனி, அட்டமத்துசனி, ஜென்மத்துசனி, சனி பார்வை என்பன உள்ள காலங்களில் ஆலயம் சென்று சனிஸ்வரனுக்கு விசேட வழிபாடு செய்வார்கள்.
பன்னிரு மாதங்களில் கன்னி மாதமான புரட்டாதி மாதமே சனிஸ்வர வழிபாடு ஆர்வமாக நடைபெறும்.ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணெய் வைத்து அரப்பு,எலுமிச்சம்பழம் வைத்து நீராடி கோவிலுக்கு சென்று சனிஸ்வரன் சந்நிதியில் எள் எண்ணெய் விளக்கு ஏற்றிச் வழிபாடு செய்வார்கள். கறுப்பு நிறத்துணி,நீலநிறப் பூக்களால் அருச்சனை செய்து சனிதோஷம் நீக்கி நல்வாழ்வு தரும்படி வேண்டுவார்கள். காகத்தை வரவழைத்து அதற்கு உணவு வழங்கி,காகம் உணவு உண்டபின்னே உணவு உண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள். புரட்டாதி மாதம் வருகின்ற எல்லா சனிக்கிழமையும் விரதம் சனீஸ்வரனுக்காக மேற்கொள்வார்கள்.
சனி மூல மந்திரம்:
"ஓம் ஐம் கிலீம்  ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ",  
சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்|| 
  சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம் 
ரவிபுத்ரம் யமாக்ரஜம்! 
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் 
தம் நமாமி சனைச்சரம்!!
  தமிழில்: 
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

Keine Kommentare:

Kommentar veröffentlichen