வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
(முருகன்-வேலுண்டு…
நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு
வடிவாகத் தோன்றி
நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் – முருகன்
வேலவனே என்றுதினம் வேண்டிடும்
அடியவர்க்கு
வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே
(முருகன்-வேலுண்டு….
உலகமென்னும் கடல் தனிலே உடல்
என்னும் ஓடமது
உன்னடிக் கரை அடைய அருளுவாய் - முருகா
நெற்றியிலே நீறணிந்து நெறியாக
உனை நினைந்து
பற்றினேன் உள்ளமதில் உன்னடி – முருகா
(முருகன்-வேலுண்டு…
ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக
வேலவனே
ஆதரித்து என்னை ஆளும் ஐயனே
வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற
அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே
(முருகன்-வேலுண்டு…
விழிகளொரு பன்னிரண்டு உடையவனே
என்று சொல்லி
விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்
கருணையே வடிவமான கந்தசாமித்
தெய்வமே - உன்
கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் – கந்தனே
(முருகன்-வேலுண்டு…
திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக்
கைதொழுது
திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் – முருகா
கந்தர் அநுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக்
கைதொழுது கரைசேர வந்தேன்
(முருகன்-வேலுண்டு…
நெஞ்சமதில் வஞ்சமின்றி நிர்மலனே
நின்னடியைத்
தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் - முருகா
மந்திரமும் தந்திரமும் மருந்துமாக
நின்ற உந்தன்
மலரடியைக் காணவேதான் வந்தேன்
(முருகன்-வேலுண்டு…
தெள்ளு தினை மாவும் தேனும்
பரிந்தளித்த
வள்ளிக்கு வாய்த்தவனே முருகா
பரங்குன்று செந்திலும் பழனி
மலை ஏரகம்
பலகுன்று பழமுதிரும் சோலையாம்
(முருகன்-வேலுண்டு…
ஓயாது ஒழியாது உன்
நாமம் சொல்பவர்க்கு
உயர் கதிதான் தந்திடுவாய் முருகா – குமரா
வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற
அடியவர்க்கு
கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே!
(முருகன்-வேலுண்டு…
Keine Kommentare:
Kommentar veröffentlichen