தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Montag, 4. Mai 2020

வேலுண்டு வினையில்லை



வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

குகனுண்டு குறையில்லை மனமே

கந்தனுண்டு கவலையில்லை மனமே

                                    (முருகன்-வேலுண்டு

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்  நெருப்பு வடிவாகத் தோன்றி

நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்முருகன்

வேலவனே என்றுதினம்  வேண்டிடும் அடியவர்க்கு

வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே

                                    (முருகன்-வேலுண்டு.

உலகமென்னும் கடல் தனிலே  உடல் என்னும் ஓடமது

உன்னடிக் கரை அடைய அருளுவாய் - முருகா

நெற்றியிலே நீறணிந்து  நெறியாக உனை நினைந்து

பற்றினேன் உள்ளமதில் உன்னடி – முருகா

                                    (முருகன்-வேலுண்டு

ஆறுபடை வீட்டினிலே  ஆறுமுக வேலவனே

ஆதரித்து என்னை ஆளும் ஐயனே

வடிவேலா என்று தினம்  வாழ்த்துகின்ற அடியவர்க்கு

கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே

                                    (முருகன்-வேலுண்டு

விழிகளொரு பன்னிரண்டு  உடையவனே என்று சொல்லி

விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்

கருணையே வடிவமான  கந்தசாமித் தெய்வமே - உன்

கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் – கந்தனே

                                    (முருகன்-வேலுண்டு

திருப்புகழைப் பாடி உந்தன்  திருவடியைக் கைதொழுது

திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் – முருகா

கந்தர் அநுபூதி பாடி  கந்தனே உன் கழலடியைக்

கைதொழுது கரைசேர வந்தேன்

                                    (முருகன்-வேலுண்டு

 

நெஞ்சமதில் வஞ்சமின்றி  நிர்மலனே நின்னடியைத்

தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் - முருகா

மந்திரமும் தந்திரமும்  மருந்துமாக நின்ற உந்தன்

மலரடியைக் காணவேதான் வந்தேன்

                                    (முருகன்-வேலுண்டு

தெள்ளு தினை மாவும்  தேனும் பரிந்தளித்த

வள்ளிக்கு வாய்த்தவனே முருகா

பரங்குன்று செந்திலும்  பழனி மலை ஏரகம்

பலகுன்று பழமுதிரும் சோலையாம்

                                    (முருகன்-வேலுண்டு

ஓயாது ஒழியாது  உன் நாமம் சொல்பவர்க்கு

உயர் கதிதான் தந்திடுவாய் முருகா – குமரா

வடிவேலா என்று தினம்  வாழ்த்துகின்ற அடியவர்க்கு

கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே!

                                    (முருகன்-வேலுண்டு

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen