தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Sonntag, 19. März 2017

பங்குனித் திங்கள்

பங்குனித் திங்கள்
பங்குனித் திங்கள் அம்மனுக்கு உரிய விரத நாளாகும். அந்த மாதத்தில் வரும் திங்கட்கிழமை தோறும் அம்மனை நோக்கி விரதம் இருந்து பொங்கலிட்டு வழிபட்டு அம்மன் அருள் பெறுவர். அன்றையதினம் பெண்கள் நோன்பு இருந்து அபிராமி அந்தாதி பக்திப்பாடல்களால் அபிஷேக ஆராதனைதனைகள் செய்து மறுநாள் சூரிய உதயத்துக்கு முன் பாராயணம் செய்வார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திலும், வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்திலும், ஆலயத்திலும்  இவ் விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

Donnerstag, 16. März 2017

வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்


ராகம்-ஆனந்த பைரவி   பாரதியார் பாடல்    தாளம்-சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
  வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
  கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
  ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
  கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்           (வெள்ளைத்....

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
  மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
  கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
  குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
  இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.              (வெள்ளைத்.....

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
  வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
  வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
  வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
  தரணி மீதறி வாகிய தெய்வம்.                     (வெள்ளைத்......

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
  தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
  உயிரி னுக்குயி ராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
  செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
  கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்             (வெள்ளைத்....

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
  சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
  வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
  வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
  சாத்திரம் இவள் பூசனை யன்றாம்!            (வெள்ளைத்...

வீடு தோறும் கலையின் விளக்கம்,
  வீதி தோறும் இரண்டொரு பள்ளி
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
  நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ரூரைத்
  தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை
  கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்!           (வெள்ளைத்.....

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
  உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
  செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
  சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
  கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க!                   (வெள்ளைத்...

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
  நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
  ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
  மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
  புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!                        (வெள்ளைத்...

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
  இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
  ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
  பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
   ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்!              (வெள்ளைத்.....

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
  நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
  ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
  வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
  இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!               (வெள்ளைத்... 


Dienstag, 7. März 2017

மாசி மகம்

மாசி மகம்
கும்பராசியில் சூரியன் இருக்கும்போது சந்திரன் சிம்மராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி மாதத்தில்  மக நட்சத்திரம் பௌர்ணமியோடு சேர்ந்து வரும் மாசி மகமாக கொண்டாடப்படுகின்றது.  முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பிடித்த பிரமஹத்தி, அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, சிவனும் அவனைக் காப்பாற்றினார். .  அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானிடம், அன்றையதினத்தில் கடலில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அருளுமாறு வேண்டினான். சிவபெருமானும் அவ்வாறே வரமளித்தார்.
வருணனைப் பிடித்த தோஷம் நீங்கிய நாளாக கொண்டாடடப்படுகிறது. அன்றையதினம் கடலாடும் தினமாகும். பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பத்தில் உள்ளோர்  ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.

உமாதேவியாராகிய பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலப்புரி சங்காக, தக்கன் மகளாக, தாட்சாயினியாக அவதரித்த திருநாளும்  இதே நாள் எனக் கூறப்படுகிறது.

பாதாளத்தில் இருந்த பூமியை, விஷ்ணு பன்றி(வராக) வடிவம் எடுத்து அசுரர்களுடன் போர் புரிந்து, கடலுக்கு அடியிலிருந்து பூமியை வெளியே கொண்டு வந்த தினமும் மாசி மகமாகும்.

முருகப்பெருமான் தந்தையராகிய சிவபெருமானுக்கு சுவாமிமலையில், ஒம் என்னும் பிரணவ  மந்திர உபதேசம் செய்த நாள் மாசி மகம் ஆகும்.

மேலும் வியாழ பகவான் மக நட்சத்திரத்துடன் கூடிய சிம்மராசிக்கு செல்லும் புண்ணிய காலம் மகா மகம் எனப்படும். இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மகா மகம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள், மக்களுடைய பாவச்சுமைகளை கழுவி அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாக நம்பப்படுகின்றது.  வரும் நதியில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர்.
நன்றி ஸ்ரீதணிகை

இலங்கையில் உள்ள சக்தி ஆலயங்களில் ஒன்றான மாத்தளை முத்து மாரியம்மன் ஆலயத்தில் இத் தினத்தில் தேர்த்திருவிழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.