வைகாசி விசாகம்
ஆண்டு தோறும் வைகாசி மாதம்
பௌர்ணமியுடன் கூடிய விசாக நட்சத்திர தினத்தை, தமிழர்கள் தமிழ்கடவுள் முருகனின் பிறந்தநாளாக
கொண்டடுவார்கள்.
நல்லோரைக் காத்து எல்லோருக்கும் இகபர
சுகம் கொடுத்து ஈற்றில் பிறவிப்பிணியை நீக்க முருகப்பெருமான் உதித்த திருநாள் வைகாசி
விசாகம் ஆகும். சிவனின் ஐம்பொறிகளில் இருந்து
ஐந்து ஒளிப்பிளம்புகளும், மனத்தில் இருந்து மற்றொரு ஒளிப்பிளம்புமாக
ஆறு ஒளிப்பிளம்புகள் சரவணப்பொய்கையில் வீழ்ந்தன. அவை ஆறு குழந்தைகளாக மாறின.
அக்குழந்தைகளை ஆறு கார்த்திகைப்பெண்கள் வளர்த்தனர். அவர்களைப் பார்ப்பதற்கு
சிவபெருமான் உமாதேவியருடன் அங்கு எழுந்தருளினர். அக்குழந்தைகளை உமாதேவியார்
ஒன்றிணைத்து அணைத்தபோது ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் கொண்ட முருகப்பெருமான்
தோன்றினர்.
“அருவமும் உருவும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய.”
வைகாசி விசாக தினத்தில் முருகன்
உதித்ததால், முருகப்பெருமான் விசாகன் எனவும் அழைக்கப்படுகின்றார். முருகன் பிறந்த
இப்புண்ணிய தினத்தில் சிறப்பாக முருகன் ஆலயங்களிலும், பொதுவாக மற்றைய ஆலயங்களிலும் விசேட அபிஷேக பூஜை வழிபாடுகளும், விரத அனுட்டானங்களும் நடைபெறுகின்றன.
எனவே முருகப்பெருமான் சக்தியை உணர்ந்து,
அவர் உதித்த இத்திருநாளகிய வைகாசி விசாக தினத்தில் முருகப்பெருமானை வணங்கி
நல்லருள் பெறுவோம்.
ஓம் சரவண பவ