தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Sonntag, 29. Oktober 2017

சொல்லடி அபிராமி



மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் அணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்

சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி வானில்

சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி

நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு

நிலவினைக் காட்டு உன் கண்ணாலே

                                                                     ( சொல்லடி அபிராமி
….

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி

படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி

படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?

                                                                      (சொல்லடி அபிராமி
……

வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென

வாராயோ அருள் மழை தாராயோ
?
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென

வாராயோ அருள் மழை தாராயோ
?

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்

நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட

வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென

வாராயோ அருள் மழை தாராயோ
?

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று

ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு

கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட

விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்

கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்


Sonntag, 22. Oktober 2017

கந்தசஷ்டி 3ம் நாள் - மாலைமலரிலிருந்து

கந்த சஷ்டி 3-வது நாள்: அருணகிரிநாதர் நாவில் வேலால் ‘ஓம்’ என்று எழுதிய முருகன்
முருகபெருமானின் பெருமைகளை பாடிய புலவர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலர் முருகனின் அருள் பெற்று பாடிய பாடல்கள் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது. அவ்வாறு முருகன் அருள் பெற்ற அருளாளர்களையும், அவர்களது பாடல்களையும் இன்று நாம் காண்போம்.

அருணகிரியார், இவர் இளமையிலே தேவாரம், திருமந்திரம், திருக்குறள் போன்ற அனைத்து நூல்களையும் கற்று தேர்ந்தவர். காம சாஸ்திரமும் கற்றவர். சிறிது காலம் தெய்வ நம்பிக்கை இல்லாமல் திருநீறு பூசாமல் மாமிசம், மதுபானம் சுவைத்து விலை மாதர்களுடன் தொடர்பு கொண்டு தன் வீட்டில் உள்ள செல்வங்களை இழந்தார். சிற்றின்பத்தில் மூழ்கி கொடிய நோய்க்கும் ஆளாகிய அவர், இனி தனக்கு மரணம் தான் விடுதலை என்று எண்ணி திருவண்ணாமலை கோபுரத்தில் ஏறி கீழே குதித்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்து கோபுரத்தில் ஏறினார்.

ஏறும் போது அவருக்கு இறைவனது சிந்தனை மேலோங்கியது. கீழே குதித்தார். என்ன ஆச்சரியம். கீழே ஒரு பெரியவர் குரு வடிவாக வந்து அருணகிரியாரை இரு கைகளால் தாங்கி பிடித்து கீழே விட்டார். அந்த பெரியவரிடம் அருணகிரியார், அய்யா என்னை ஏன் காப்பாற்றினீர்கள். என்னுடைய பாவ மூட்டையை கரைக்க முடியாது. அதனால் மரணத்தை தவிர வேறு மார்க்கம் இல்லை என்றார். அதற்கு அந்த பெரியவர், நீ கந்தனை (முருகன்) வணங்கி தமிழ் பாடல் பாட வேண்டும்.

2. அதுவரை முருகனது சிந்தனையோடு இக்கோவிலின் எல்லையில் சும்மா இரு என்று அந்த பெரியவர் கூறினார். அதன்படி அருணகிரியாரும் அந்த கோவிலிலே பல நாட்கள் தியானம் செய்தார். ஒருநாள் அருணகிரியார் முன்பு முருக பெருமான் தோன்றினார். தன்னுடைய திருவடி தரிசனம் தந்து காட்சி கொடுத்தார். அருணகிரியார் நாவில் முருக பெருமான், ஓம் எனும் மந்திரத்தை வேலால் எழுதி அருணகிரிநாதர் என்று திருநாமம் சூட்டி அருள் செய்தார்.

மேலும் முருக பெருமான், “முத்தை தரு” என்ற பாடல் அடியை எடுத்து கொடுத்து பாடுக என்றார். அதன்பிறகு முருகன் அருளால் பல்வேறு தலங்களுக்கு சென்று திருப்புகழ் என்ற 16 ஆயிரம் பாடல்களை அருணகிரிநாதர் இயற்றி பாடியதாக சொல்லப்படுகிறது. நமக்கு கிடைத்ததோ 1,400 பாடல்கள்தான். திருப்புகழ் பாடல் முழுவதிலும் முருகனது பெருமைகளை பக்தி ரசம் சொட்ட சொட்ட பாடியுள்ளார் அருணகிரி நாதர்.

தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீரவில்லை. வாழ்க்கையே வெறுத்து திருச்செந்தூர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு செந்தூர் கடற்கரைக்கு வந்தார். அப்போது கந்தசஷ்டி விழா தொடங்கும் நாள். தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள் சஷ்டி விழாவில் 6 நாட்கள் விரதம் இருந்து 6-வது நாள் தன் உயிரை போக்கி கொள்ளலாம் என்று எண்ணி முதல் நாள் விரதம் தொடங்கினார்.

கவிபாடும் திறமை பெற்று இருந்த தேவராய சுவாமிகள் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாட முடிவெடுத்தார். தினம் ஒன்றாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டுக்கு உரிய கவசங்களை பாட தொடங்கினார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் 6-வது நாள் கவசம் பாடி முடித்ததும் வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது. கந்தசஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், துன்பத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுவும் செந்தூர் கந்தசஷ்டி கவசம் இன்று உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களால் பாடப்பட்டு வருகிறது.

3. காஞ்சீபுரத்தில் குமரக்கோட்டம் என்ற முருகபெருமானின் ஆலயத்தில் காளத்தியப்ப சிவாச்சாரியார் பூஜை செய்து வந்தார். அவருடைய மகன் கச்சியப்பர். சிறு வயதிலேயே அனைத்து பக்தி இலக்கியங்களையும், காவியங்களையும், புராணங்களையும், வேதங்களையும் கற்றுத் தேர்ந்தார். சமஸ்கிருத மொழியில் உள்ள புராணங்களையும், ஜோதிடக்கலையையும் சிறப்பாக கற்றவர்.

தன் தந்தை வழியிலேயே முருக பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு பூஜை செய்து வந்தார். ஒரு நாள் முருக பெருமான், கச்சியப்பர் கனவிலே தோன்றினார். “வடமொழியிலே ஒரு லட்சம் சுலோகங்களை கொண்ட ஸ்கந்த புராணத்தை நீவிர் தமிழில் பாடுவாயாக“ என்று கூறி திகடச் சக்கரம் என்ற வார்த்தையையும் அடி எடுத்துக் கொடுத்தார் முருக பெருமான். கச்சியப்ப சிவாச்சாரியாரும் அந்த வார்த்தையை கொண்டு தினம் 100 பாடல்களாக எழுதி, அதனை முருக பெருமான் காலடியில் இரவு வைத்து விட்டு செல்வார்.

மறுநாள் கோவில் நடை திறந்ததும் அதனை பார்த்தால் அந்த பாடல்களில் ஒரு சில திருத்தங்கள் இருந்தன. முருக பெருமானே அவருடைய பாடல்களை திருத்தம் செய்தார். அவ்வாறு 10 ஆயிரத்து 346 பாடல்களை எழுதி முடித்து அப்பாடல்கள் அரசனது அவையிலே அரங்கேற்றம் செய்யப்பட்ட போது, சோழ நாட்டு புலவர் ஒருவர் வடிவத்தில் வந்த முருகபெருமான் மற்ற புலவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைத்தார்.

ஆக முருக பெருமானே தன் வரலாற்றை கச்சியப்பர் சிவாச்சாரியார் மூலம் எழுத வைத்துள்ளார். முருகனின் அவதாரம் முதல் சூரபதுமனை வெற்றி கொண்டு தெய்வானையை திருமணம் செய்யும் வரை உள்ள வரலாற்றை ஆறு காண்டங்களாக பிரித்து பல்வேறு அதிகாரங்களாக எழுதியுள்ளார்.

தகவல்: நெல்லை புலவர் மா.கந்தகுமார்.
நன்றிகள்: மாலைமலர்


Samstag, 21. Oktober 2017

கந்தசஷ்டி 2ம் நாள்- (மாலைமலரில் இருந்து)

கந்தசஷ்டி 2-வது நாள்: தந்தை கொடுத்த பணியை செய்து முடித்த முருக பெருமான்
முருகப்பெருமானின் வீரம் குறித்து பல்வேறு புலவர்கள் சிறப்பாக கூறி இருந்தாலும், முருக பெருமான் வரலாறு பற்றி பாடிய கச்சியப்ப சிவாச்சாரியார் தனது கந்த புராணத்திலே முருக பெருமான் வேறு, சிவபெருமான் வேறு அல்ல. இருவரும் ஒருவரே என்றும், சிவனின் அனைத்து சக்திகளையும் கொண்டு முருக பெருமான் விளங்கினார் என்றும் கூறுகிறார்.

கார்த்திகை பெண்கள் ஆறு பேரால் முருகன் வளர்க்கப்பட்டார். திறமையான போர் கருவிகளை எப்படி கையாள வேண்டும் என்று அவர்கள் முருகனுக்கு கற்றுக் கொடுத்தனர். சிவனின் ஆற்றலையும், பார்வதி தேவியின் அருளையும் பெற்ற முருகன் முதன்முதலாக போருக்கு புறப்படுகிறார். லட்சம் வீரர்களும், சேனைகளும் நவ வீரர்கள் சூழ சூரனை அழிக்கும் திருவுள்ளத்துடன் புறப்பட்டார்.

திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோருடன் தேவர்கள் சூழ முருகனுக்கு தேரோட்டியாக வாயுதேவன் தேரை செலுத்த, முருகன் வீரம்மிக்க பராக்கிரமான தோற்றத்தோடு புறப்பட்டார். அகத்திய முனிவர் சாபத்தால் கிரவுஞ்சம் என்ற மாயை மலையாக தோன்றிய அசுரனை அழித்தால்தான் இம்மலைக்கு பக்கத்தில் உள்ள மாயாபுரியில் ஆட்சி செய்யும் சூரபதுமன் தம்பி தாரகாசூரனை அழிக்க முடியும் என்பதை உணர்ந்த முருகன், கிரவுஞ்சம் மலையை தன் வேலால் இரண்டாக பிளந்தார்.


2.சுற்றிலும் அம்பு கணைகள் ஆயிரம் தொடுத்து யானை முகத்தை கொண்ட தாரகாசூரனை எதிர்த்து போர் புரிந்தார். தாரகாசூரனை வதம் செய்ய, முருகன் தன் வேற்படையை ஏவினார். முருகனது வேலானது தாரகாசூரனை அழித்து அவனது ஆணவத்தை போக்கியது. தாரகாசூரன் முருகனிடம் கேட்கிறார். “மைந்தா நீ எங்களுக்கு பகைவன் இல்லையே? எங்களுக்கும், சிவபெருமானுக்கும் எந்த பகையும் இல்லையே.

பின் எதற்காக போருக்கு வந்தாய் என்று கேட்க, அதற்கு முருகன் அறவழியில் நடப்பவர்களுக்கு அருள் செய்வதும், தீவினை புரிபவர்களை தண்டிப்பதும் என் தந்தையான சிவபெருமானின் அருட்செயல்களாகும். சிவபெருமானிடம் பல வகையான வரங்களை பெற்ற நீங்கள் தர்மவழியில் நடக்கவில்லை. தேவர்களை சிறையில் அடைத்தீர்கள். நீங்கள் செய்த அதர்ம செயல்களுக்காக உங்களை தண்டித்த தேவர்களை சிறை மீட்கும் பணியை என்னிடத்தில் கொடுத்திருக்கிறார் என் தந்தை சிவபெருமான். அதைத்தான் நான் செய்தேன் என்றார் முருகன். தாரகாசூரனின் உடலை அழித்து அவரது ஆன்மாவை ஏற்றுக்கொண்டு அய்யனாருக்கு வாகனமாக யானையை தந்து முருகபெருமான் அருள் புரிந்தார்.

முருகனின் வீரமும் அருளும் வெளிப்பட முக்கிய காரணம் சூரபதுமன் செய்த கொடுஞ்செயல்கள்தான். யுத்த களத்திலே 7-வது நாள் முதல் 10-வது நாள் வரை முருக பெருமான், சூரபதுமனோடு போர் புரிந்தார். வாயுதேவன் கொண்டு வந்த தேரில் முருகபெருமான் ஏறி தன் படை வீரர்களோடு சாந்தமே உருவாக புறப்பட்டார்.

3. சூரபதுமனின் படை வீரர்களின் எண்ணிக்கையை பார்த்து, “முருகன் இவர்களை எல்லாம் அழிப்பதற்கே பல ஆண்டுகள் ஆகும் போல தெரிகிறது. அதற்குள் ஊழிக்காலம் (உலகம் முடிவுக்கு வரும் காலம்) வந்து முடிந்து விடும்“ என்று திருமாலிடம், இந்திரன் சொல்கிறார். அதற்கு, முருக பெருமானின் பெருமைகளை திருமால் கூறும் போது, “பெரிய கடல் போல உள்ள இந்த படைகளை எல்லாம் முருகப் பெருமான் ஏய் என்று சொல்லும் போது அழிந்து விடும்.

அவர் இப்படைகளை எல்லாம் விரைந்து அழிப்பார். கோபத்தினால் கொல்வார். திருவாக்கால் அழிப்பார். பார்வையால் அழிப்பார். இது அவருக்கு திருவிளையாடல். முருகப் பெருமானை குழந்தை என்று எண்ணாதே. அவருடைய வேற் படையால் சூரன் அழிவான்“ என்கிறார். முருகப் பெருமான் தன் விசுவரூப தரிசனத்தை சூரனை நோக்கி காட்ட, அதனை அவன் பார்க்க முடியாமல் அவனது ஆணவம் நீங்கியது.

முருகனை இரு கைகளால் கூப்பி வணங்கினான். ஆனால் அவனது அகங்காரம் மீண்டும் தோன்ற பல மாய தோற்றங்களோடு மறைந்து மாமர தோப்பில் ஒரு மாமரமாக நின்றான். முருகன் தன் வேலை அனுப்ப, அந்த வேலானது சூரபதுமனை தேடி மாமரத்தை இரண்டு கூறுகளாக ஆக்கியது. முருக பெருமான் தன் அருளால் ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி கொடியிலும், தன் வாகனமாகவும் வைத்து கொண்டான். முருகன் தன் வீரத்தால் புகழ் பெற்றான்.

தகவல்: நெல்லை புலவர் மா.கந்தகுமார்.
நன்றிகள்: மாலை மலர்


Dienstag, 17. Oktober 2017

தீபாவளி திருநாள்

 
“தீபம்” என்பது விளக்கு. “ஆவளி” என்பது வரிசை.தீபங்களை வரிசையாக ஏற்றி கொண்டாடப்படுவதால் இப்பண்டிகையை தீபாவளி என அழைக்கப்படுகின்றது.இது ஐப்பசிமாதத்து கிருஷ்ணபட்ஷ சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இதனை நரக சதுர்த்தசி என்று கூறுவார்.

தீபாவளி திருநாள் என்பது தாய் (பூமாதேவியின் அம்சமான சத்யபாமா) தன் மகனான கொடிய நரகாசுரனை வதம் செய்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.                                                 

இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வென்றார்.அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.                                                             

பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.

நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.


 நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும்என     விரும்பினார்.                                                               

நரகாசுரன் என்ற அசுரன்  இறக்கும்போது அஞ்ஞான இருள் நீங்கி ஞானஒளி பெற்றமையால்,தான் இறந்த தினத்தை பூமியில் உள்ளோர் அனைவரும் மகிழ்வாக கொண்டாடவேண்டும் எனக் கிருஷ்ணபகவானிடம் வரம் கேட்டான். அவ்வாறே நரகாசுரன் கேட்ட வரத்தினை அளித்து கிருஷ்ணபகவான் ஆட்கொண்டதால் இப்பண்டிகை நரக சதுர்த்தி என அழைக்கப்படுகிறது.          

தீபாவளி நாளில் எண்ணெய் வைத்து சூரிய உதயத்துக்கு முன்னர் வெந்நீரில் குளியல் செய்வார்கள். அன்றைய தினத்தில் ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் கங்காதேவியும், எண்ணையில் இலக்குமியும் எழுந்தருவார் என்பது நம்பிக்கை.

புத்தாடைகள் புனைந்து  ஆலயங்கள் சென்று வழிபாடு செய்து வருவார்கள். அறுசுவை உணவுகளுடன் பட்சணங்கள் சமைத்து உறவினர்கள், நண்பர்களுடன் கூடி உண்டு மகிழ்வது இந்துக்களின் மரபாகும்.சிலர் தீபாவளி அன்பளிப்பு கொடுத்து மகிழ்வார்கள். இதனால் மக்களிடையே ஒற்றுமை உணர்வும் விருந்தோம்பல் பண்பாடும் வளரும்.

தீபங்களின் ஒளி சிற்சக்தியாகக் கொள்ளப்பட்டு, ஒளியானது இருளை நீக்குவது போல, சிற்சக்தி ஆன்மாவின் அக இருளை நீக்கி மலத்தை போக்கி  ஞானத்தினை நல்குகின்றது என்ற தத்துவத்தையும் தீபாவளி பண்டிகை குறித்து நிற்கிறது.