சித்திரா பௌர்ணமி விரதம்
பூரணை விரதம் ஒரு பிதிர் விரதமாகும்.
சோதிடர்கள் சந்திரனை மாதுருகாரன் என்பர். பூரணை விரதம் சந்திரனைச் சார்ந்தது.
தாயாரை இழந்தோரால் பூரணை அனுஷ்டிக்கப் படுகிறது.
சித்திரை மாதம் சித்திரை
நட்சத்திரத்தோடு சந்திரன் நிற்கும் காலமாகும். அச் சமயம் சூரியன் மேட இராசியில்
நிக்கிறது. சந்திரன் சித்திரையோடு கூடி சித்திரைக்குரிய துலாராசியில் நிக்கிறது.
மேடத்தில் இருந்து துலாம் ஏழாம் இடம் ஆனதால் பூமிக்கு ஏழாம் பாகையில் நின்ற
சந்திரன் முழு வலிமை பெறுகிறது. முழு வலிமையும் சித்திரையில் கிரகணத்தோடு கூடிப்
பூமிக்கு சித்திரை பௌர்ணமி அன்று தருகிறது. இந்த நாள் விஷேடமாக
இருத்தலால் சித்திரை பௌர்ணமி முக்கியமானதால் விரதமிருத்தல்
சிறப்பானது.
இந்நாளில் இந்திரன் தன் தீவினைகள் அகல
சிவனை வணங்கி வேண்டிக்கொண்டான். அப்போது சிவன் ருதுக்களில் சிறந்த வசந்த ருதுவும்,
மாதங்களில் சிறந்த சித்திரை மாதமும், நட்சத்திரங்களில் சிறந்த சித்திரை நட்சத்திரமும், திதிகளில்
சிறந்த பௌர்ணமி திதியும் கூடும் இந்நாளில் நம்மைப் பூஜித்தால் 365நாட்களும் பூஜை செய்த பலன் கிடைக்கும்
என அருளினார். இதன்படி இந்திரனும் பூஜித்து வரலானான்.
சித்திரை பௌர்ணமி விரதம் நம்மை பாவகாரியங்களில்
இருந்து விலக்கி புண்ணிய சீலர்களாக ஆக்குவதர்க்கான பக்குவத்தை அளிக்கிறது. எனவே சித்திரை பௌர்ணமி
தினத்தையும் அதன் தார்பரியங்களையும் தெரிந்து கொண்டு இப் புண்ணிய தினத்தில் உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டிப்பதால் இறந்த
தாயாரின் ஆத்மா நற்கதி அடைகின்றது. அத்துடன் இக்காலத்தில் சிவனை தியானித்து
வழிபடுபவர்கள் நற்பேறு எய்துவர் எனக் கூறப்படுகிறது.