மகாசிவராத்திரி
மனிதன் தன்
வாழ்வை நெறிப்படுத்தி ஆன்மீகத்துறையில் முன்னேற உதவும் வழிகளில் சிவராத்திரி விரதமும் ஒன்றாகும்.
அதிலும் சிவபிரானை மெய்யன்போடு விஷேடமாக வழிபடுவதற்குரிய விரதங்களில்
மகாசிவராத்திரி சிறப்புடையது. மகாசிவராத்திரி என்பதன் பொருள் பெருமை மிக்க ஆதியும்
அந்தமும் இல்லாதா சிவனுக்கு உரிய இரவு என்பதாகும்.
இது ஆண்டு
தோறும் மாசி மாத தேய்பிறை பதினான்காம் திதியில், அதாவது கிருஷ்ண பட்சத்து
சதுர்த்தசியில், திருவோணம் நக்ஷத்திரம் கூடிய
புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப்படும்.
சிவராத்திரியை
விளக்கும் சில புராணக்கதைகள் இருந்தாலும், நாம் சிறுவயதிலே படித்த யார் பெரியவர்
என்ற அடி முடி தேடிய கதையே வழக்கத்தில் உள்ளது.
உலகத்தை
படைத்த பிரம்மாவும் உலகத்தை காக்கும் விஷ்ணுவும்(திருமாலும்) தம்மில் யார்
பெரியவர் என்ற வாதம், இறுதியில் போராக மாறியது. அவ்வேளையில் அவர்கள் முன் பரமசிவன்
ஒளிப்பிழம்பான சோதி வடிவமாக தோன்றினர். யார் இந்த சோதியின் அடியை, அல்லது முடியை
காண்கிறாரோ அவரே பெரியவர் என ஓசை கொடுத்தருளினார்.
பிரம்மா
அன்னப்பட்சி வடிவமாக பறந்து சோதியின் முடியையும், விஷ்ணு பன்றியாக மாறி நிலத்தைக்
குடைந்து சென்று அடியையும் தேடினார்கள். எவ்வாறு தேடியும், நீண்டகாலம் கழிந்தும்
அடியையும், முடியையும் காண முடியவில்லை. உடலும் உள்ளமும் களைப்படந்தபோதுதான் யார்
பெரியவர் என்பதை உணர்ந்தார்கள். சிவபெருமானே பெரியவர் என்று இருவரும்
வணங்கினார்கள். சிவபெருமானும் சோதி வடிவத்தைச் சுருக்கி சிவலிங்கமாக
காட்சியளித்தார். சிவபெருமான் இலிங்கோற்பவராக தோன்றிய இரவு தினமே சிவராத்திரி
தினமாகும்.
இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி
திதியில் இரவில் கொண்டாடப்படும். விரதம் பிடிப்போர் முதல் நாளன்று ஒரு பொழுது உணவருந்தி
சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து
நான்கு யாம வழிபாடு செய்வார்கள். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி
(பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்வார்கள்.